Vetriyin Aabayam
வெற்றியின் அபாயம்
புழுக்கமான இரவு. பருவ மழை ஏறக்குறைய முடிந்துவிட்டது. இந்தியாவுக்கு வந்து இரண்டாவது மழைக்காலத்தைக் கடந்துவிட்டேன். கரும்பச்சையில் காடு முழுக்கச் செழிப்பு வெடித்துக் கிளம்பியிருக்கிறது. ஆழ்ந்த நிழலில் சிவப்புப் பூக்கள் கறுப்பாகத் தெரிகின்றன. குருவின் வீட்டு வாசலில் சிலரோடு காத்திருக்கிறேன். காவி உடை அமைதி. ஆவல் கொப்புளிக்கும் முகங்கள். காட்டுக்குள் இரவில் மிருகங்களின் சரசரத்த நடமாட்டம் போல அடங்கிய குரல்களில் பேசிக் கொள்கிறார்கள். நானோ எதையும் எதிர்பார்த்து நிற்கவில்லை. எதிர்பார்ப்புகளும் அவற்றின் நூற்றுக்கணக்கான போலித் தோற்றங்களும் நிழல்களும் என்னிடமிருந்து ஒதுங்கிப் போயாகிவிட்டன.
இந்த எதிர்பார்ப்புகளும் நானும் ஒருவருக்கொருவர் சலித்துப் போனவர்களாகிப் போய்விட்டோம். ஒருவருக்கொருவர் இல்லாதவர்களாகிப் போய்விட்டோம். சலிப்பை யெல்லாம் தாண்டிவிட்டவளாகிப் போய்விட்டேன். நீண்டகாலமாகத்தான் நாமெல்லாம் காத்திருக்கிறோம். நானும்தான் காத்திருக்கிறேன். கடைசியாக வாயிலைத் தாண்டி வீட்டின் ஒரு பக்கத்தில் கல் பரவியிருக்கும் பாதை வழியாக நடக்கிறோம். நாங்கள் ஒவ்வொருவரும் அவரவர் உலகத்தில் இருக்கிறோம். திடீரென அவர் தெரிகிறார்.
கறுத்த நாற்காலியில் பிரகாசமாக அவர் தெரிகிறார். சற்றே மாநிறம். வெகு சுவாதீனமாக அமர்ந்திருக்கிறார். மெல்லிய உடை. அவரைச் சுற்றி ஒளியும் இருட்டும் ஒன்றுக்குள் ஒன்றாகப் படர்ந்திருக்கின்றன. ஒரு கால் மேல் இன்னொரு கால் கழட்டிவிட்டிருக்கும் ஒரு காலணி. சிற்ப நேர்த்தியில் தெரியும் பாதம் விழுந்து வணங்கத் தூண்டும் அழகு.
Reviews
There are no reviews yet.