Erakkuraiya Sorkkam
ஏறக்குறைய சொர்க்கம்
”ஏறக்குறைய சொர்க்கம்’ முதலில் தொடர் கதையாக வெளிவந்தது. குமுதம் இதழில் ஆரம்பகாலங்களில் ‘நைலாள் கயிறு’, ‘அனிதா இளம் மனைவி’ போன்ற குற்றம் சார்ந்த கதைகள் எழுதிவந்தபோது ’24 ரூபாய் தீவு’ நாவலில் சற்று வித்தியாசமான கதையை அளித்தேன்.
அதிலும் குற்றம் சற்று யதார்த்தமான சூழலில் நிகழ்ந்தது. ‘ஏறக்குறைய சொர்க்கம் ’தான் நான் குமுதத்தில் முதன் முதலாக அன்றாடம் சார்ந்த கதையை முயற்சித்தேன். ஒரு அழகான மனைவி இருந்து அல்லல் படுகிறவர்கள் அழுகையைப் பார்த்திருக்கிறேன்.
இந்தக் கதையில் கதாநாயகன் எப்படி அந்த சங்கடத்துடன் சமரசம் செய்து கொள்கிறான் என்பது பலருக்கு அதிர்ச்சி தந்ததாயும் உண்மைக்கு மிக அருகில் உள்ளதாக பலர் சொல்கிறார்கள். ஏறக்குறைய சொர்க்கம் மறு பதிப்பாக இப்போது வரும்போது அந்தக் கணவன் எடுத்த முடிவு சரியானதா என்று இந்தக் காலகட்டத்தில் பரிசீலிக்கலாம். ஏறக்குறைய சொர்க்கம் முடிவு பற்றிய ஒரு முன்னுரை- இந்தக் கதை ‘குமுதத்தில் தொடர்கதையாக வந்து முடிந்த போது, பலபேர் அதன் முடிவை விரும்பவில்லை. ஒரு பதிப்பாளர் முடிவை மாற்றி அமைத்து எழுதுமாறு கூடச் சொன்னார். முடிவை மாற்றுவதற்குப் பதில் பதிப்பாளரை மாற்றிவிட்டேன்.
சிறுபான்மையான சிலர் இந்த முடிவு மிகவும் பொருத்தமானது என்று எழுதியிருந்தார்கள். கதையின் முடிவில் அந்தக் கணவன் புதிய வாழ்க்கைக்கு தன்னைப் பழக்கிக் கொண்டு விடுவதில் ஒருவிதமான வீழ்ச்சி இருப்பதை இந்தச் சிலர்தான் உணர்ந்திருந்தார்கள். எந்தக் கதையும் முடிவதில்லை .
ஏதோ ஒரு காலகட்டத்தில் தொடங்கி ஏதோ ஒரு கட்டத்தில் நிறுத்துகிறோம், அவ்வளவே. அறுதியிட்டு இதுதான் கதை இனிமேல் கிடையாது என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டால், புதுமைப்பித்தனின் ‘சாப விமோசனம் போன்ற கதைகள் உருவாகியிருக்க முடியாது. பின் குறிப்பாக ஒன்று.
இந்தக் கதையின் முடிவு பிடித்திருக்கிறது என்று சொன்ன பெண்களெல்லாம் அழகாக இருந்தார்கள்.
Reviews
Clear filtersThere are no reviews yet.